வணக்கம் டாக்டர் எப்படி இருக்கீங்க?
நான் நல்லா இருக்கேன். இதே மாதிரி எங்க போனாலும் முகமூடி போட்டிக்கிட்டு போங்க. அடிக்கடி கைகளைக் கழுவுங்க. வீட்ல எல்லாரும் நலமா?நலம். கரோனானால மூச்சுத் திணறல் ஏன் டாக்டர் வருது?
கரோனா கிருமி உள்ள நுழைஞ்சதும் அதைக் கொல்றதுக்காக தற்காப்புத் துறை தன் படைகளை அனுப்பும். அதுல கீட்டோன்சும் உண்டு. மற்ற படைகளால் வெல்ல முடியாதப்ப கீட்டோன்ஸ் கிருமியை சுத்தி வளைச்சு வெடிச்சிருங்க. தற்கொலைப் படை. இந்த வெடிப்புல நுரையீரல் செல்களும் பாதிக்கப் படும். இதே மாதிரி ஒவ்வொரு கிருமியாக் கொல்லும் போது நுரையீரல் பெருவாரியா பாதிக்கப் பட்டிருக்கும். இதனால நுரையீரலால மூச்சுச்சுற்றை முடிக்க முடியாம திணறல் வருது.
இந்த மூச்சுச் சுற்றை விளக்குங்களேன்?
பள்ளிக் கூடத்துல படிச்சது மறந்து போச்சா? (சிரிக்கிறார்) மூச்சும் இதயமும் ஒருங்கிணைந்து செயல்படணும். உடம்புல உள்ள செல்கள்ல ஆற்றல் எரிப்பு தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும். எரிக்கிறதுக்கு ஆக்சிஜன் வேணும். குருதி தான் ஆக்சிஜனை சுமந்து செல்லும். ஆக்சிஜனை குருதில ஏத்தி விடுறது நுரையீரலின் முதல் சுற்று. இந்தக் குருதியை இதயம் உடல் முழுக்க நல்ல அழுத்ததுல அனுப்பி விடும். செல்கள் எரிக்கிற வேலையைச் செய்யும் போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும். இது திரும்ப குருதில தொத்திக்கிட்டு நுரையீரலுக்கு வரும். நுரையீரல் கார்பன் -டை- ஆக்சைடை பிரிச்சு எடுத்துக்கும் பிறகு ஆக்சிஜனை ஏத்தி விடும்.
இது மாதிரி எத்தனை சுற்று ஒரு நிமிடத்துக்கு?
உடல் அளவைப் பொறுத்து மாறும்.
ஏன் அப்படி?
இதயம் ஒரு தடவை துடிக்கும் போது உடல் முழுக்க ஆக்கிஜன் போய்ச் சேரணும். குழந்தைகளுக்கு உடல் அளவு சிறியதுங்கிறதால விரைவா ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைட் சுற்று முடிஞ்சிரும். அதனால இதயத் துடிப்பும் அதிகமா இருக்கும், மூச்சும் கூடுதலா எடுத்து விடுவாங்க.
அப்ப எலிக்கு இதயத் துடிப்பு ரொம்ப அதிகமா இருக்கும்.
ஆமா, யானைக்கு ரொம்பக் குறைவு. அவ்வளவு பெரிய உடம்பு முழுக்க ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனைக் குடுத்துட்டு வரணும் இல்லையா?
ஓ, நம்மளோட உறுப்புகள் எல்லாத்துக்கும் இருக்கக்கூடிய ஒரே வெளிஉலகத் தொடர்பு இந்தக் காற்று தான் இல்லையா?
ஆமாம், காற்றை ஒரு ஊடகமா நினைச்சுக்கிட்டம்னா மூச்சு விடு தூதுன்னு பாட்டு எழுதிரலாம்.
அதேதான் டாக்டர். என் மூச்சில் கலந்தவளேன்னு சொல்றதுக்கு வலுவான அடிப்படை இருக்குறதா உணர்றேன். அப்பப் பெருமூச்சு?
மன மயக்கம் ஏற்படும் போது ஆழ்ந்த சிந்தனையில் எண்ண ஓட்டத்திற்கு ஈடு தர முடியாமல் நுரையீரல் செயல்பாடுகள்ல சீர்மை குன்றும். அப்ப இரண்டு மூன்று மூச்சுகள் ஒண்ணு சேர்ந்துரும். இதுக்கு மேல சேர்த்து வைக்க முடியாதுன்னு அங்கங்க இடர் குறிப்போசை (அபாயமணி) அடிக்க நுரையீரல் முழு வேகத்துல காற்றை வெளிய அனுப்பும். இந்த மூச்சு இயல்பை விட ரொம்பவே நீளமானது. அதான் பெருமூச்சுங்கிறோம்.
மூச்சை ஊடகமாச் சொன்னீங்கள்ல அப்படின்னா பெருமூச்சு ஒரு செல் விடாம எல்லா செல்கள்ட்ட இருந்தும் தகவலைப் பெற்று கோர்த்து மொத்தமா வெளியிடும் நடைமுறைன்னு வைச்சுக்கலாமா?
ம், தாராளமா. நினைவுகள் தான் இந்தப் பெருமூச்சைத் தூண்டுதுன்னு வைச்சுக்கிட்டா காதலன் காதலி குறித்த உடல், மனம் இணைந்து வெளிப்படுத்தும் ஏக்கம் தான் பெருமூச்சு.
நீங்க சொன்னதை அப்படியே கபிலர் குறிப்பிட்டிருக்கார் டாக்டர்.
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தான்அறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்தென்
உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!
பிற உயிர் வருந்துவதைத் தாங்காத பேதைப் பெண்ணின் கணவன் பொருள் தேடி வெளியூர் போயிருக்கான். அங்க அவள் நினைவுகள் அவனை வாட்டுகின்றன. தான் வாடுவதை அறிந்தால் அவளும் வாடுவாளே அதனால் தன் வருத்தம் அவளுக்குத் தெரிந்து விடக் கூடாதுன்னு பெருமூச்சு விடுகிறான். அந்தப் பெருமூச்சை நள்ளிரவில் உறங்கும் யானை விடும் மூச்சின் வேகத்துக்கும் அளவுக்கும் ஒப்புமை வைக்கிறார் கபிலர். அந்த வேகமும் அளவும் தான் அவள் குறித்த எண்ணங்களின் பரிமாணம். செம்மை!
என்னால நம்பவே முடியலை. இன்னிக்கு இருக்குற அறிவியல்ல வளர்ச்சில நான் சொன்னது பள்ளிப் பாடம் தான். இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னால இவ்வளவு துல்லியமா எண்ணங்களை மூச்சோடு பொருத்தி அதற்கு யானை குறைவாக விடும் அளவில் நெடிய மூச்சை ஒப்புமை படுத்துனதை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலை. அருமை!
Comments