சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்தென்
உள்ளம் பின்னும் தன்னுழை யதுவே!-கபிலர்
அவள் ஒரு பேதை. அன்பு நிரம்பியவள். அது அவள் கண்களிலேயே தெரியும். நான் பார்த்திருக்கிறேன். மலர்ந்து மணம் வீசும் மலரைச் சூடும் பெண்களிடையே பூக்களுக்குப் பறிக்கும் துன்பம் தர அஞ்சுபவள். உதிர்ந்து சுனை நீரில் ஓடி வரும் பூக்களைத் தொடுத்தே அணிபவள். இவ்வளவு ஏன், திணைக் காவல் சென்றால் மாலை திரும்பும் போது தொண்டை கட்டிக் கொண்டிருக்கும். ஏய் கிளி, என் காட்டின் கதிர்களை தின்னாதே. எனக்கு இழப்பு ஏற்படுத்தாதே. தின்றது போதாதா என்றெல்லாம் திட்டுவாளே ஒழிய கவண் வில் சுழற்ற மாட்டாள். கிளிகளுக்கு அடிபடுமோ என வாடுவாள். என் மனைவி தான் அவள்.
இப்போது பொருள் தேடி வெகு தொலைவு வந்து விட்டேன். நெஞ்சில் நின்றாடும் அவள் காதல் பார்வை சுரக்கும் அன்பு பெரும் ஏக்கத்தைத் தருகிறது. அந்த ஏக்கம் நள்ளிரவில் உறங்கும் யானையின் மூச்சினும் நெடியதாய் பேரொலி கிளப்பி என் நினைவுகள் அவளையே சுற்றி வருவதை அறிவாளா என்ற வினாவோடு முடிகிறது.
Comments