தன் முயற்சியில் சற்றும் தளராத அளசிங்கப் பெருமாள் (அல்லது) இளைஞர் இருவர் இந்திய சிந்தனையை உலகுக்கு அறிவித்த கதை
ஆன்மிகத்தில் நாட்டமுடையவராக இருந்த அளசிங்கப் பெருமாள் அமெரிக்காவில் அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்று நடக்க இருப்பதை தன் கிருத்துவக் கல்லூரி தொடர்புகள் வழியாக அறிந்தார். இந்து சமயம் சார்பாக உரையாற்றப் பலர் தயாராக இருந்த போதும் அப்போதிருந்த மதக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடல் தாண்டிச் செல்ல முன் வரவில்லை. அவருடைய தாய்மாமா ஒருவர் வைஷ்ணவம் குறித்த குறிப்புகளைத் தந்து யாரையாவது அமெரிக்க மாநாட்டில் வாசிக்கச் சொன்னார். அந்த நேரத்தில் தன் இந்தியப் பயணத்தைக் கன்னியாகுமரியில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருந்தார் விவேகானந்தர். விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்த அளசிங்கப் பெருமாள் அவரிடம் தன்னிடமிருந்த குறிப்புகளைத் தந்து கருத்துக் கேட்டார்.
குறிப்புகளைப் படித்த விவேகானந்தர் வெடித்துச் சிரித்தார். குண்டி கழுவும் போது பூணூலை காதில் மாட்டிக் கொள்ள வேண்டும் போன்ற ஆச்சாரங்களை வரிசைப்படுத்தி இந்து சமயத்தின் மேல் ஏற்றியிருந்தவை அவை. அளசிங்கருக்கு விவேகானந்தர் இந்து மதத்தின் தத்துவ அடிப்படைகளை விளக்கினார். இந்தளவு இந்து தத்துவம் குறித்து வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் விவேகானந்தரே அமெரிக்க மாநாட்டில் கலந்து கொள்ளணும்ன்னு கேட்டுக் கொண்டார் அளசிங்கர். முதலில் மறுத்த விவேகானந்தர் பின்னர் தேவைப்படும் பணம் குறித்து கவலையை வெளிப்படுத்தினார். அமெரிக்கா போய் திரும்ப சுமார் 400 ரூபாய் தேவைப்படும் என கணக்கிட்டார்கள்.
இவ்வாறாக கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத இந்திய சிந்தனை மரபை உலகளாவிய ஒரு சமய மாநாட்டில் பிரதிநிதித்துவப் படுத்துவது யார் என முடிவு செய்த அளசிங்கருக்கு வயது 26, விவேகானந்தருக்கு 28.
மளமளவென செயலில் இறங்கினார் அளசிங்கர். தன்னால் அணுக முடிந்த செல்வந்தர்கள், சமீன்தார்களிடம் உதவி கேட்டார். இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி ரூ200 தருவதாக ஒப்புக் கொண்டார். வேறெவரும் முன் வரவில்லை. மனம் தளராத அளசிங்கப் பெருமாள் சென்னையின் வீதிகளில் இறங்கி வீடுகளில் அணாக்களில் பணம் சேர்த்தார். தேவையான பணம் சேர்ந்ததும் பாஸ்கர சேதுபதியிடம் தெரிவித்தார்கள். இதற்கிடையில் பார்ப்பனர்கள் குறுக்கிட்டு இந்து மதம் பற்றி உரையாற்றும் தகுதி சாதி அடிப்படையில் விவேகானந்தருக்குக் கிடையாதென்று சேதுபதியின் மனத்தை மாற்றியிருந்தார்கள். இதனால் சேதுபதி ஒப்புக் கொண்ட படி பணம் தரவில்லை. திகைத்துப் போன இளைஞர்கள் இருவரும் பயணத்திட்டத்தைக் கைவிட்டார்கள். அளசிங்கர் தான் அறவிட்ட பணத்தை திரும்பக் கொடுத்து விட்டார். விவேகானந்தர் தன்வழியில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் சென்றார்.
ஐதராபாத் நிஜாமின் இந்து மனைவி விவகானந்தரை வரவழைத்து அவையில் பேசக் கேட்டுக் கொண்டார். நிஜாமிடம் தன் இந்தியப் பயணம் குறித்து விவரித்த போது அமெரிக்க மாநாடு குறித்தும் அதில் கலந்து கொள்ள செய்த ஏற்பாடுகள், கை விட்டது பற்றியும் சொன்னார். வெறும் நானூறு ரூபாய்க்காகவா கைவிட்டீர்கள், நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன். நீங்கள் பயணத்திட்டத்தைக் கவனியுங்கள்ன்னு சொல்லிட்டார்.
உடன் சென்னைக்கு வந்தவர் அளசிங்கரிடம் தன் பயண ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொன்னார். கேள்விப் பட்ட சேதுபதியும் தான் தருவதாகச் சொன்ன ரூ200ஐத் தந்து விட்டார். ஒருவழியாக விவேகானந்தர் 1892ல் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் இறங்கிய விவேகானந்தருக்கு மாநாடு ஓராண்டு ஒத்தி போடப்பட்ட செய்தி சொல்லப் பட்டது. சிக்கனமான செலவுக்கு மட்டுமே பணம் வைத்திருந்த விவேகானந்தருக்குப் பெரும் அதிர்ச்சி. தகவலை அளசிங்கருக்கு அனுப்பிய விவேகானந்தர் தன் கையிருப்பைக் கொண்டு ஓராண்டு தாக்குப் பிடிப்பது அரிதென்றும் தான் எவ்வளவு சிக்கனமாக இருந்த போதும் ஒரு நாளைக்கு ஒரு பவுண்ட் அளவில் செலவாவதாகவும் தன்னால் இயன்ற அளவு இங்கேயே பொருள் தேடிக் கொள்வதாகவும் அது வரைக்குமான செலவுக்குப் பணம் அனுப்புமாறும் கடிதம் அனுப்பினார்.
தன் முயற்சியில் தளர்ச்சி அறியாத அளசிங்கப் பெருமாள் தன் சொந்த முயற்சியில் கடனாகவும் மனைவியின் தகைகளை அடகு வைத்தும் வீடுகள் தோறும் அறவிட்டும் ரூ1000ஐ விவேகானந்தருக்கு அனுப்பினார். இந்த நேரத்தில் விவேகானந்தருக்கு ஓர் அமெரிக்கச் சீமாட்டியின் நட்பு கிடைத்தது. பின்னாளில் நிவேதிதா என்று நாம் அறியும் அவர் தொடர்பில் சில கூட்டங்களில் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டங்களில் விவேகானந்தருக்குக் கிடைத்த பணமும் அவருடைய பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க உதவியது. வேறெந்தத் தடையும் இல்லாமல் உலக சமய மாநாட்டில் பேசி விவேகானந்தர் மாபெரும் வரவேற்பைப் பெற்றதும் அடுத்த சில மதங்களுக்கு அவர் அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பின்னர் இந்தியா திரும்பியதும் அனைவரும் அறிந்தது. சென்னையில் அவருக்கான வரவேற்புக் கூட்டங்களை அளசிங்கப் பெருமாள் ஒருங்கிணைத்தார்.
இரண்டாவது அமெரிக்கப் பயணத்தின் போது கொழும்பு வரை அளசிங்கப் பெருமாளை வரச் சொன்னார். அளசிங்கர் தான் ஆச்சாரங்களைக் கடைபிடிக்கும் வைணவராயிற்றே. கடல் தாண்ட மாட்டேனுட்டார். நீ கடல் தாண்ட வேண்டாம், கப்பல்லயே இருந்து திரும்பி விடுன்னு சொன்னார். வெளியில் சாப்பிடக் கூடாது என்பதற்காக அளசிங்கர் வறுத்த அரிசி, பொரி முதலியவற்றைக் கட்டிக் கொண்டு வந்ததைக் கிண்டலோடு குறிப்பிட்டிருக்கிறார் விவேகானந்தர். தன் அமெரிக்கப் பயணம் குறித்து விவரித்தவர் சென்னையில் மடம் ஒன்று நிறுவ இடம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போதும் இயலாது என்று சொல்லாத அளசிங்கர் ஊருக்கு வெளியில் இடம் பார்க்காலம்னு சொல்லி இருக்கிறார். 'அச்சிங்கா (அப்படித் தான் விவேகானந்தர் விளித்திருக்கிறார்) பணம் பற்றிய கவலையை விட்டு விடு, வேண்டும் பொருள் கிடைக்கும். ஊருக்குள்ளேயே நல்ல இடத்தைப் பார்' என்றிருக்கிறார். அவ்வாறாக அளசிங்கப் பெருமாளால் ஏற்படுத்தப் பட்டது தான் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடம். இந்தியாவின் முதல் இராமகிருஷ்ண மடம் அது. அதன் பிறகே பேலூர் மற்றும் பிற இடங்களில் மடங்கள் துவங்கப் பட்டன. அளசிங்கப் பெருமாள் காலம் வரைக்கும் மயிலாப்பூர் மடமே தலைமை மடமாக இருந்திருக்கிறது. அளசிங்கப் பெருமாளின் உறவினர்கள் பலரும் கூட வரலாற்றில் நன்கு அறியப்பட்டவர்கள் தான்.
இந்தப் பகிர்வு எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லக் கேட்டு நினைவிலிருந்து எழுதப் பட்டது. விவேகானந்தரின் செயல்பாடுகளில் அளசிங்கப் பெருமாளின் பங்களிப்பு குறித்து இன்னும் ஒரு தரவு இருக்கட்டும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்டது. பிழைகள் இருக்கலாம். சுட்டினால் திருத்தி விடுகிறேன்.
மேல் உசாவலுக்காக:
தமிழ் விக்கி கட்டுரை - https://tamil.wiki/wiki/அளசிங்கப்_பெருமாள்
அளசிங்கப் பெருமாள் குறித்த விரிவான நூல் - https://mdl.mandayamsabha.in/uploads/book/bk_1589016980.pdf
அளசிங்கப் பெருமாளுக்கு அமெரிக்கச் சூழல் பற்றியும் பணத்தேவை பற்றியும் விவேகானந்தர் விவரித்து எழுதிய மடல் - https://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_5/epistles_first_series/004_alasinga.htm
Comments