Skip to main content

யார் வள்ளல்?

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.
இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.

அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.

அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).

மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,
பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.

தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்
பாரியின் தேர் அவனிடம் இல்லை.

இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.

அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.

இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்?

ஆம்!

எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.

பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம் எள்ளும் என எண்ணாமல் வழங்கினார்கள். அதனால் தான் அவர்கள் வள்ளல்கள், காலம் பல கடந்தும்.

அந்த வரிசையில் நமக்கு வாய்த்தவர் தான் கொடுத்துச்சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். அவரை வள்ளல் என அழைக்கப் போதுமான காரணிகள் பல இருப்பினும் எடுத்துக்காட்டிற்கு ஒன்று இங்கே.

அது 1983 ஆம் ஆண்டு. இலங்கையில் இருந்து வந்த இளைஞர்கள் (பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம்) இனம் காக்க உதவி வேண்டிய பொழுது, தன் சொந்தத் பணத்தில் இருந்து 2 கோடி ரூபாயை வழங்கினார். அரசு மூலமாக வழங்கலாமே என அவர்கள் கேட்டதற்கு 'அரசு மூலம் பணம் வழங்க கால தாமதம் ஏற்படும் எனவே என் பணத்தில் இருந்து தருகிறேன்' என பதிலளித்து வியப்பிலாழ்த்தினார் நம் வள்ளல். எண்ணிய உடன் செய்வதற்கு வள்ளல்களுக்குத் தானே மனம் வருகிறது.

அள்ளிப் போட்ட தகவல் இல்லை, ஆதாரம் உரைப்பவர் நன்றியுடன் நினைவு கூறும் பிரபாகரன் அவர்கள்.

Comments

creative360° said…
"எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;
எண்ணிய உடன் செய்பவன் வள்ளல்".

nacchunu irukku. there is so much truth in these two lines. bussula seat vittukudukkumbodu irukkara thrupti, porandanallaniku anadi illathula seyyarada vida konjamundu jasti...

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...

தன் முயற்சியில் சற்றும் தளராத அளசிங்கப் பெருமாள் (அல்லது) இளைஞர் இருவர் இந்திய சிந்தனையை உலகுக்கு அறிவித்த கதை

இரண்டு இளைஞர்களில் விவகானந்தரை எல்லாருக்கும் தெரியும். இந்தக் கட்டுரையில் நாம் முதன்மைப் படுத்தப் போவது இன்னொரு இளைஞரான அளசிங்கப் பெருமாளை. அளசிங்கப் பெருமாள் தந்தை அன்றைய சென்னை மாகாணத்தின் சிக்கமகளூரில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர். இங்கேயே படித்து முடித்த அளசிங்கப்பெருமாள் கும்பகோணத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரானார். ஆன்மிகத்தில் நாட்டமுடையவராக இருந்த அளசிங்கப் பெருமாள் அமெரிக்காவில் அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்று நடக்க இருப்பதை தன் கிருத்துவக் கல்லூரி தொடர்புகள் வழியாக அறிந்தார். இந்து சமயம் சார்பாக உரையாற்றப் பலர் தயாராக இருந்த போதும் அப்போதிருந்த மதக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடல் தாண்டிச் செல்ல முன் வரவில்லை. அவருடைய தாய்மாமா ஒருவர் வைஷ்ணவம் குறித்த குறிப்புகளைத் தந்து யாரையாவது அமெரிக்க மாநாட்டில் வாசிக்கச் சொன்னார். அந்த நேரத்தில் தன் இந்தியப் பயணத்தைக் கன்னியாகுமரியில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருந்தார் விவேகானந்தர். விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்த அளசிங்கப் பெருமாள் அவரிடம் தன்னிடமிருந்த குறி...