பீம சங்கர்
மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம்.
1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா
2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா
3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா
4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம்
பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார்.
திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில் நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை.
ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து கிடைக்கும் சத்ரபதி சிவாஜி நகர் பேருந்து நிலையத்துக்குப் போனோம். 5 மணி பேருந்து 5:30க்கு வந்தது. சிலர் முன்பதிவு செய்திருந்தனர். எப்டி, எப்டின்னு கேட்டதுக்கு ரெட்பஸ்ஸில் என்றார்கள். டப்பா வண்டி! 9 மணிக்கு பீமசங்கர் அடைந்தோம். அங்கயே 50 ரூபாய் கட்டணத்தில் குளிச்சிட்டு காலை உணவாய் மிச்சர் தூவிய பட்டாணி மசாலாவைத் தொட்டு மூணு குட்டி பன் சாப்பிட்டோம். பத்து மணிக்கு வரிசையில் நின்று இரண்டு மணி நேரத்தில் சாமி பாத்தோம்.
ஒரு மணி அளவில் திரும்பவும் பேருந்து நிலையம். சில குளறுபடிகளால் மூன்று மணிக்குப் பிறகே பேருந்து கிடைத்தது. அதுவும் மும்பை போற பேருந்து. வழியில் இறங்கி பூனா நகர்ப்பேருந்து எல்லைக்குள் வந்து இன்னொரு பேருந்து எடுத்து ரயில் நிலையம் வந்தோம். அன்று காலையில் அவுரங்காபாத் போக செய்திருந்த முன்பதிவு ஆர்ஏசிக்கு வந்திருந்தது. மேல் பெர்த் காரருக்கு கீழ்ஓர இருக்கையைத் தந்து மேலே தாவி நன்கு உறங்கினோம். ஐந்தரைக்கு அவுரங்காபாத்தில் இறங்கினோம். இப்ப சம்பாஜி நகர்ன்னு பேர மாத்திட்டாங்க. பொறுமையாய் டீ குடித்து விட்டு அறை எடுக்கலாம்ன்னு அளாவிக் கொண்டிருந்த போதுதான் என் மொபைலைக் காணோம்ன்றது உறைத்தது.
Comments