நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.
அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன் வேலையில் மும்முரமானாள். அவளுக்கும் அன்னியன் போல. 'என்ன பண்ணச் சொல்றீங்க?' என் குரல் எனக்கேத் தெளிவாக கேட்க வில்லை. என்னையே சிறிது நேரம் பார்த்தான். 'சித்தப்பா வந்தாருன்னா சேவ் பண்ணச் சொல்வாரு. ஒரு உதவியும் கிடையாது'ன்னு தொடர்ந்தான். பணம் கேட்க அடிபோடுகிறான் என்று நினைத்தேன். ஒருவேளை மிகுந்த மன உளைச்சலில் இருப்பானோ? ஒரு மனிதனின் புலம்பலைக் கேட்கக் கூடவா எனக்கு மனமில்லை. கேட்டு வைக்கலாம்னு அவனைப் பார்த்தேன். 'சித்தியோ ஒண்ணும் பண்ணாது.' சற்று நிறுத்தினான். 'இம்புட்டு சப்பாதிச்சுக் கொடுத்திருக்கேன். இப்ப ஒண்ணும் இல்ல.' எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனாலும் இப்படியே அடுக்கிக் கொண்டு போய் கடைசில பணம் தானே கேப்பான்னு இருவித இகழ்ச்சியும் இருந்தது. அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. வெறுமே பார்த்துக் கொண்டு இருந்தான். திடீரென்று கைவிடப்பட்டவன் போல. இதுவரையிலும் பிச்சை எடுத்துப் பழகாததால் வாய்விட்டுக் கேட்கக் கூச்சமாக இருந்திருக்கும்.
சாப்டீங்களான்னு கேட்கத் தோன்றியது. ஆனாலும் துணியவில்லை. சிகரெட்டைக் கீழே போட்டு விட்டு கிளம்ப ஆயத்தமானேன். அவனைப் பார்ப்பதா வேண்டாமா? 'சரிங்க'ன்னு சொல்லிட்டு, அதுவும் எனக்கு மட்டுந்தான் கேட்டிருக்கும், வண்டியைக் கிளப்பினேன். என்னால் வேகமாக வண்டியைச் செலுத்த முடியவில்லை. ஒருவாய் 'சாப்டீங்களா'ன்னு கூடக் கேட்கலையே. திரும்பிப் போய்க் கேட்கலாமா? 'பிழைச்சேன்னு போவியா....' அப்புறம் தொடர்ந்து சென்று விட்டேன். இன்னமும் பிழைத்தவன் என்ற உறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Comments