Skip to main content

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1

இராமன் கதை இங்கே

எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன்
புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த
கோமகன் மக்கள் குறையற ஆண்டனன்
தாமரைப் பூமக ளோடு.

கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில்
பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை
ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய்
நன்னிலஞ் செல்ல நசிந்து.

குசை - மகிழ்ச்சி
கோவில் - அரண்மனை

கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள்
எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை
ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான்
வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று.

அத்தம் - காடு

என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை
பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள்
சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார்
மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு.

சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும்
நிறையிலை என்பார் இருக்க - பொறையறு
மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால்
குன்றில் உருண்டதாம் கல்.

இரியல் - விரைந்து, நிலை தடுமாறி

தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம்
மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப்
பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே
பணிந்தான் இளவல் பழிக்கு.

பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில்
அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான்,
சுணங்கினான் சோர்வாய்; ஒருமையில் ஆழ்ந்தான்,
முணங்கும் மனம்வழி ஒத்து.

முணங்கு - முணு, முணுத்தல்

ஞாயிறு தோன்றுமுன் ஞாலம் விழிக்குமுன்
சேயுற்ற மாதுடன் சேவகன்போல் தேய்ந்து
சுமந்திரன் தேரில் இருந்தான் இலக்குவன்
உம்பலாம் தோள்களும் சோர்ந்து.

உம்பல் - வலிமையுடைய, எழுச்சி மிகுந்து

முந்தைய பகுதி      அடுத்த பகுதி

Comments

////ஞாயிறு தோன்றுமுன் ஞாலம் விழிக்குமுன்
சேயுற்ற மாதுடன் சேவகன்போல் தேய்ந்து
சுமந்திரன் தேரில் இருந்தான் இலக்குவன்
உம்பலாம் தோள்களும் சோர்ந்து.////

அருமை அருமை வாழ்த்துகள். வெண்பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துகள். அருமையிலும் அருமை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!
Tamilparks said…
அருமை வாழ்த்துக்கள்

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...

ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ

இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ! இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது. தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த வி...